|
தம்பி தண்ணி இனிப் போடாதே - போட்டுத்
தன்னை மறந்து நீ ஆடாதே - உன்னை
நம்பி இருக்கின்ற மனைவி மக்களை
நடுத்தெருவில் விட்டு ஓடாதே! | தம்பி... |
தெம்பை இழந்துநீ ஏங்காதே - ஊர்
வம்பை விலைகொடுத்து வாங்காதே - உயர்
பண்பை அழிக்கின்ற பாழுங் கள்ளை நீ
பருகிப் பருகியே கருகிப் போகாதே | தம்பி... |
அம்மி மிதிச்சவ அழுது புலம்பிடக்
கம்மல் மூக்குத்தியைக் கழற்றித் கேட்பதா?
அன்பின் ஆழத்தை அளந்து பார்க்கவோ
அடித்துத் துவைத்தவளை வெளுத்துப் போடுவது? | தம்பி... |
திருத்தும் மனைவியை முறைத்துப் பார்க்காதே
திட்டித் தீர்த்தவளை எட்டி உதைக்காதே
வருத்தும் குடியைநீ நிறுத்து இன்றோடு
கழுத்தை நீட்டியவள் கவலை பறந்தோடும் | தம்பி... |
காசு கையிலே இருக்கும் போதிலே
கட்டுப் பாட்டினை இழந்து போகாமல்
ஏசு புத்தரைக் காந்தி யண்ணலை
எண்ணிப்பாரு நீ தண்ணி போடுமுன் | தம்பி... |
மாசு மறுவற்ற மனித தெய்வங்கள்
வாழ்ந்து காட்டிய வழியில் செல்லுவாய்
காச நோயினா லின்னல் பட்டு நீ
கண்ணை மூடுமுன் உன்னைத் தேற்றிக்கொள் | தம்பி... |
இருக்கும் பொருட்களைக் குடித்து அழிக்காதே
இன்ப வாழ்க்கையை இழந்து தவிக்காதே
என்றோ வரும்சாவை இன்றே அழைக்காதே
எமனைப் பார்த்து நீ தவணை கேட்காதே | தம்பி... |
குடியைக் கெடுக்கின்ற குடியைக் குடிக்காதே
குட்டிச் சுவராகிக் கெட்டுத் தொலைக்காதே
அடிமையாகி மது வரக்கன் கைகளால்
மடிந்து போகும்முன் மனத்தை மாற்றிக்கோ | தம்பி... |
இறுதியாக நீ உறுதி கொள்ளுவாய்
மறந்து மினிமேல்நீ மதுவைத் தீண்டாமல்
திருத்திக் கொண்டுனைத் திருத்து உலகினை
தெய்வத் தன்மையை எய்த லாகும் நீ | தம்பி... |