தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்

நாளிதழ் நடவடிக்கைகள்: சென்ற இதழில் குறித்தபடி அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை

மொத்தம் உரூ.
2,31,283
சென்ற திங்கள் வந்த தொகை:
திரு பொ. இராமராசு, கோவை. 
உரூ. 50
ஆக மொத்தம்  
2,31,333

இணையத் திங்களிதழி "தமிழ்க்காவல்' என்ற பெயரில் உருவாகிவருகிறது. அடுத்த தெளிதமிழ் வெளியாவதற்கு முன் பளிக்ககூடும் என்று கருதுகிறோம். அதன் இணைய முகவரி : www.thamizhkkaaval.net என்பது, வழக்கப்படி நன்கொடைகளைத் 'தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை' என்ற பெயருக்குப் பணவிடையாகவோ கேட்புக் காசோலையாகவோ திரு. தி. ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரிக்கு அனுப்புக.

தெளிதமிழ்க்குப் பரிசளிப்பு :
தெளிதமிழ்த் திங்களிதழ் செய்துவருவது செவ்விய பணி சீர்மைமிகு பணி, சிறப்புமிகு பணி., செந்தமிழ்ச் சிந்தையர் எல்லாம் சீராட்டிச் செய்ந்நன்றி பாராட்டும் செழுமைமிகு பணி! தாங்கள் தெளிதமிழ் ஆசிரியராகப் பொறுப்பேற்று ஆற்றிவரும் தன்னேரில்லா இலக்கியப்பணிகளுக்காக, எங்கள் தமிழ்வலம் தங்களைத் தலை நிமிர்ந்து பாராட்டுகிறது. தங்கள் தெளிதமிழ் இதழுக்குச் சிறப்புச் செய்ய விழைகிறது. புதுவைப் புகழ்மணி திருமதி மணிமேகலை குப்புசாமி அவர்கள், தெளிதமிழைச் சிறந்த செந்தமிழ்ப்பணி இதழாக முன்மொழிந் தார்கள்., கவிமாமணி கடவூர் மணிமாறன் அவர்கள் வழி மொழிந்தார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பாவலர்கள் போற்றிப் பரிந்துரை செய்தார்கள். தமிழ்வலம் ஆய்வுக்குழு மேற்பட்ட பாவலர்கள் போற்றிப் பரிந்துரை செய்தார்கள். தமிழ்வலம் ஆய்வுக்குழு ஒருமனமாகத் தெளிதமிழைச் சிறந்த செந்தமிழ்ப்பணி இதழாகத் தெரிவு செய்துள்ளது. தமிழ்வலம் வெண்பா நானூறு நூல்வெளியீட்டு விழாவில் இதழ்விருது வழங்கப்படும் என மகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார் தமிழ்வலம் அமைப்பின் தலைவர் பைந்தமிழ்ப் பாமணி. திரு. ப.ப. இராமசாமி, தாராபுரம்.

நன்னன் குடி நடத்தும் நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுப் போட்டி தி.பி. 2039 (கி.பி.2008) சிறுகதை :
நன்னன்குடி நடத்தும் "நன்னன் அண்ணல்" நினைவுப்பரிசுப் போட்டி - 2008 சிறுகதை முடிவுகள் பின்வருமாறு அறிவிக்கப்படுகின்றன.

1. முதற்பரிசு :பத்தாயிரம் (ரூபாய் 10,000) திரு. ம. அரங்கராசன்
2. இரண்டாம் பரிசு :ஆறாயிரம் (ரூபாய் 6,000) திரு. த. கருணைச்சாமி
3. மூன்றாம் பரிசு :நான்காயிரம் (ரூ. 4,000) திரு. ஆர்க்காட்டு ஆதவன்

இம் மூன்று கதைகளுடன் வேறு ஒன்பது கதைகளையும் சேர்த்து அவை நூலாக வெளியிடப்படுகின்றன. பரிசளிப்பும், சிறுகதைத் தொகை நூல் வெளியீடும் 30.7.2008 இல் சென்னையில் நடைபெறும். படைப்புகளின் சிறப்புக் குறைவு, எம்மை இப்போட்டிகளை இவ்வாண்டுடன் (2008) நிறுத்தச் செய்துவிட்டது என்பதை மிக்க வருத்தத்துடன் அறிவிக்கிறோம். -முனைவர். மா. நன்னன்.

மகாகவி பாரதி ஐந்தமிழ் விருதுகள் :
தமிழ்மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், கலை, இலக்கியங்களின் வாயிலாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் அறிஞர்களைப் பாராட்டிச் சிறப்பாகும் வகையில் 2008 முதல் பாரதியார் பல்கலைக்கழகம் "பாரதியார் ஆராய்ச்சி மையம்" இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஊடகத் தமிழ் என்ற ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்க இருக்கிறது. இவ்விருதுகள் முறையே.

1. மகாகவி பாரதி இயற்றமிழ் விருது
2. மகாகவி பாரதி இசைத்தமிழ் விருது
3. மகாகவி பாரதி நாடகத்தமிழ் விருது
4. மகாகவி பாரதி ஊடகத்தமிழ் விருது
5. மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது என்பதாகவும் அமையும்.

40 அகவை மேற்பட்ட மூத்த அறிஞர்கள் ஐவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக வழங்கப்படும். 40 அகவை உட்பட்ட இளைஞர்களை ஐவருக்கு இளம் சாதனையாளர் விருதாக வழங்கப்படும். இவ்விருது ஒவ்வொன்றும் பொற்கிழி ரூ. 25,000 உம் கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் கொண்டதாகும். இவ்விருதுகள் 2008 சூலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் ஐந்தமிழ் இலக்கியத் திருவிழாவில் வழங்கப்படும்.

இவ்விருதுக்கு விண்ணப்பம் அறிஞர்கள் தங்களின் சாதனைகள் அடங்கிய விவரக்குறிப்பு / நூல்களின் ஒருபடி சாதனைகள் தொடர்பான ஆவணங்களின் நகல்களில் ஒருபடி போன்றவற்றை 2008 ஏபிரல் 11க்குள் அமைப்பாளர் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

அவ்விருதுக்கான தகுதியுடையோருக்காக அவர்களின் சார்பில் யார் வேண்டுமானாலும் முறையான ஆவணங்களுடன் பரிந்துரைத்து அனுப்பலாம். 40 வயதுக்கு உட்பட்டோர் மட்டும் வயதை உறுதிப்படுத்தும் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை அனுப்பிட வேண்டும். இதற்கான தனியான விண்ணப்பம் ஏதும் இல்லை. துறை சார்ந்த வல்லுநர் குழு விருதிற்கு உரியவர்களைத் தெரிவு செய்யும்.

அமைப்பாளர் தொடர்பு முகவரி : முனைவர் தே. ஞானசேகரன், அமைப்பாளர் - மகாகவி பாரதி ஐந்தமிழ் விருதுகள், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 046. அலைபேசி : 94861-28857.

தமிழியம் கற்பிக்கப் பயிற்றுநர்கள் தேவை : பாவாணர் கோட்டம் உருவாக்கியுள்ள 22 சிற்றூர்த் தமிழமைப்புகளுக்குத் தமிழியம் கற்றுக்கொடுக்கவிருக்கிறோம், மொழி, இனம், நாடு, பண்பாடு, கலை, இலக்கியம், இலக்கணம், ஆட்சி, வாழ்வியல், வரலாறு தொடர்பாகப் புலமை பெற்றவர்கள் மடல் தொடர்புகொள்ள வேண்டுகிறோம். தமிழ்ப் பணியாளர்கள் முகவரியுடன் ஒப்புதல் மடல் எழுதி உதவிட வேண்டுகிறோம்.

தொடர்புக்குரிய முகவரி : ஆ. நெடுஞ்சேரலாதன், பாவாணர் கோட்டம், சீயோன் மலை, முறம்பு, சோழபுரம் தெற்கு - 626139. விருது நகர்.

பாவாணர் கோட்டத் தமிழ் விழா :பாவாணர் கோட்டச் சார்பாக 7.2.2008 இல் முறம்பில் தமிழ்விழா நடைபெற்றது. பல்லடம் அறிஞர் ந. முத்துக்குமரனார் தலைமையில் தமிழறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. "பாவாணர் கொள்கை பரப்புநர்" விருதைச் சொல்லாராய்ச்சி அறிஞர் - அகரமுதலி இயக்குநர் - பாவாணர் பற்றாளர் இரா. மதிவாணர் பெற்றுச் சிறப்புரை நிகழ்த்தினார். திருவள்ளுவர் அறக்கட்டளையின் ஆட்சிப் பொறுப்பாளர் மா. செ. தமிழ்மணி அறக்கட்டளைக்கு உரு ஐயாயிரம் வழங்கினர். சங்கத் தமிழ்ச்செல்வன் கல்வெட்டுக்கு உரு ஆயிரத்து ஒன்று வழங்கினார். நிகழ்ச்சிகளை அமைப்பாளர் ஆ. நெடுஞ்சேரலாதன் தொகுத்து வழங்கினார்.

மறைந்த தமிழ்நெஞ்சத்தை நினைந்து வருந்துகிறோம் :

அமெரிக்கா அட்லாண்டா நகரில், சுற்றுச் சூழலியற் பேராசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றிவந்த திரு. கோவிந்தராசு அவர்கள் 7.12.2007 இல் (தம் 52 ஆம் அகவையில் திடுமென இறுதி எய்தினார். நல்ல தமிழ்ப்பற்றும், பகுத்தறிவு மனப்பான்மையும் கொண்டு கொள்கைக் குரிசிலாக வாழ்ந்த தம் அன்புத் தமையனாரின் நினைவைப் போற்றும் வகையில், அன்னாரின் தங்கையும் தெளிதமிழ் உறுப்பினருமான, சத்தியமங்கலம், பாசக்குட்டைப்புதூர் அர. செல்வமணி அவர்கள் 2500 உரூபாயைத் தெளிதமிழ் வளர்ச்சிக்கு நன்கொடையாக அனுப்பி யுள்ளார். அந்த அன்புக் கொடைக்கு நன்றி கூறுவதோடு பேராசிரியரை இழந்து வருந்தும் அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறுகிறோம். - ஆசிரியர்.

செம்மொழிப்போர் மறவர் செயராமன் மறைந்தார் :

வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழியின் உயர்வையே எண்ணி வாழ்ந்த ஆசிரியர், திருக்குறள் ஆ. செயராமன் 28.02.2008 அன்று தம் 78 அகவையில் வட சிறுவளூரில் இறுதி எய்தினார். புதுதில்லியில் நடந்த செம்மொழிப் போர் முனையிலும் தம் துணைவியாருடன் இணைந்தே நின்று போரிட்டவர் அவர். இந்தச் செந்தமிழ் இணையரைத் தமிழுலகப் போராட்டக் களங்கள் நன்கறியும். துணையை இழந்த அன்றிப் போல் வாடும் சரசுவதி அம்மையாருக்கும் குடும்பத் தார்க்கும் எங்கள் அன்பான ஆறுதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம் - ஆசிரியர்.