பாவலர் பரிசுதிட்டம்

பாவலர் பரிசுதிட்டம்-42இல் பரிசு பெற்றவர்

பெயர்:பாவலர் மா.வரதராசன்
பிறந்த நாள்: 07.04.1973
பெற்றோர்:மு.மாரி - மா.தனபாக்கியம்
கல்வித்தகுதி:முதுகலை - தமிழ் (இரண்டாமாண்டு)
வழிகாட்டி ஆசான்கள்: பைந்தமிழ்ப் பாவலர் மு.வே. கங்காதரன்,
முனைவர் இரா. திருமுருகன்
வெளிவந்த படைப்பு: பாவலர் மா. வரதராசன் கவிதைகள்
அச்சில் உள்ளது: மலர்ந்தமொட்டு (பாவியம்)
வெளிவர இருப்பவை: நற்றமிழ் மாலை, மகாகவி பாரதியார் பிள்ளைத்தமிழ்
முகவரி: பி. 62/12, மவுன்ட்பேட்டன் தெரு, சத்தியமூர்த்தி குடியிருப்பு,
மேற்கு சாபர்கான்பேட்டை, சென்னை-600 083.
பாவலர் பரிசு திட்டம்-42

உரூபா 500 பரிசு பெறும் பாடல் :

1.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதென் றுயர்த்தியே
திங்கடொறும் கூறும் தெளிதமிழே - இங்குள்ள
தங்கத் தமிழர்க்குத் தம்மொப்பம் ஆங்கிலமாம்
எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃது!
- பாவலர் காலையூர் நெய்தல்நாடன்.

வெளியீட்டுக்குத் தேர்வுபெற்ற பாடல்கள் (தரவரிசைப்படி):

2.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது; தமிழ்மறவர்
பொங்குதமிழ் காத்ததெல்லாம் போனதையோ - மங்காமல்
எங்குமிங்கே ஆங்கிலந்தான் எந்தமிழைக் கொல்லுதையோ
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது.
- கலைமாமணி புலவர் பூங்கொடிபராங்குசம்.

3.எங்கடமிழ்ச் சொல்லின் நிலையிஃதெம் இல்லமெலாம்
"அங்கிளு'ம் 'டாடி','மம்மி' 'ஆன்டி'யும் - அங்குமிங்கும்
எங்கும் 'டமிள'ாய் எதிலும் தமிங்கிலமாய்
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது.
- கலைமாமணி கோவி. கலியபெருமாள், அரியாங்குப்பம்.

4.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதென் றியம்புதற்
கிங்குண் டியல்பான வேர்ச்சொற்கள் - பங்களித்துத்
தங்குதடை யின்றித் தழைக்கத் தடங்காட்டும்
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது.
- புலவர் தங்க. ஆறுமுகன், சென்னை.

5.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதெனவே சுட்டிடவோ?
பொங்குகடல் நாடாண்ட பூந்தமிழ்தான் - மங்கிடவே,
இங்குளார் செய்கின்றார் என்பதனை நொந்துசொல்வேன்
எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃது!
- புலவர் வ. சிவசங்கரன், திருக்கழுக்குன்றம்.

6.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதெனவே சொன்னலத்தைப்
பொங்குமுணர் வோடுசொலிப் போற்றிடுவேன்; - தங்குபுகழ்
இங்களித்து நாற்பொருளும் ஏற்றமுற வேயளிக்கும்
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது.
- கி. சிவகுமார், விருத்தாசலம்.

7.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென்று போற்றியே
பொங்குதமிழ் என்றே புகழ்ந்தாலும் - இங்கிந்நாள்
சங்கமுற வாழ்ந்ததமிழ் தாழ்ந்தநிலை எய்திற்றே
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது.
- கு. அரங்கநாதன், வரிச்சுக்குடி.

8.எங்கடமிழ்ச் சொல்லி னிலையிஃது முன்னாள்முச்
சங்கத்தை வைத்துத் தமிழ்வளர்த்தார் - எங்குமிந்நாள்
மங்காத் தமிழ்கலந்த வேற்றுச்சொல் நீக்கிலர்
எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃது.
- புலவர் த.தட்சணாமூர்த்தி, திரு.பட்டினம்.

9.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென்றே சொல்லியழ
எங்களால் ஆகுமா ஏந்திழையே - உங்களினம்
பொங்கி யயழுந்து புலப்படுத்தி நில்லாக்கால்?
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது.
- ஊருணிப் பாவலன், சென்னை.

முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் :

1.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென் றிதன்மாண்பை
எங்கும் விளங்க எடுத்துரைத்தும் - இங்குள்ளோர்
தங்குழந்தை ஆங்கிலந் தான்பயில வேண்டுமென்பார்
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது!
- புலவர் மா. சு. மணி, திருக்கழுக்குன்றம்.

2.எங்கடமிழ்ச் சொல்லின் நிலையிஃது நாட்டினிலே
எங்கும் தமிழில்லை என்பதுவே - பொங்குகிற
வங்கமெனப் பாய்ந்திடுமே வண்டமிழும் செம்மொழியே
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது!
- பாவலர் மா. வரதராசன், சென்னை -83.

3.எங்கட மிழ்ச் சொல்லினிலை இஃதென் றறியா தார்
மங்காத் தமிழோடு மற்றமொழி - எங்கெங்கும்
தங்குதடை யில்லாமல் தம்பேச்சில் தைக்கின்றார்
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது.
- வே.ச.திருமாவளவன், புதுச்சேரி.

4.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதாய்த் தனித்தமிழை
sவங்கங் கடந்தும் வளர்த்தாரே! - சங்கையின்றி
இங்குள்ளார் பன்மொழியி னெல்லாச்சொல் லுங்கலந்தார்!
எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃது.
- சிலம்பூர்க்கிழான், கள்ளக்குறிச்சி.

5.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென் றெடுத்துரைத்துப்
பொங்குமுளம் நல்லதமிழ் போற்றுமுளம்! - மந்திரம்போல்
வெங்கொடுமை தீர்க்கும்! விடிவளிக்கும்! நின்றுலவும்!
எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது!
- பைந்தமிழ்ப் பாவலர் சி.பெருந்தேவன், தவளக்குப்பம்.

கருத்தூன்றுக

சென்ற இதழில் கொடுக்கப்பட்ட, 'எங்கள் தமிழ்ச்சொல்லின் நிலை இஃது', என்ற தொடரின் சொற்களை முறைப்படிப் புணர்த்தால், 'எங்கடமிழ்ச் சொல்லி னிலை யிஃது'

என்றாகும்.

இதனை வெண்பாவின் தொடக்கத்தில்,

'எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது' என்றோ,

'எங்கடமிழ்ச் சொல்லி னிலையிஃது' என்றோ

முதல் மூன்று சீராக அமைத்துக் கொள்ளலாம். அல்லது,

'எங்க டமிழ்ச்சொல் லினிலை இஃது' என்று வெண்பா முதலடியாகவும் அமைக்கலாம். ஆனால், 'டமிழ்ச்சொல் லினிலை' என்று வகையுளி செய்து சீர்பிரிப்பது விரும்பத்தக்கதன்று. எனவே முதல்வகைச் சீர்ப்பிரிப்புகளே கொள்ளத்தக்கன. காட்டாக,

தங்க டனமிருக்கத் தார்வேந்த ரெல்லாரும்
எங்க டனத்துக்கோ இச்சித்தார்? - எங்கடனம்
கச்சிருக்கும் தோலிருக்கும் காமபாணங் கள்பட்டுப்
பிச்சிருக்கும் வேண்டாம் பிளாய்!

என்ற ஒப்பிலாமணிப், புலவரின் தனிப்பாடலைக் காண்க. "எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது என்ற சீர்ப்பிரிப்பில் இத்தொடர் முழுவதும் வெண்பாவின் ஈற்றடியாகவே அமைகிறது. வெண்பாவின் தொடக்கத்தில் இதனை 'எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது' என்று முதல் மூன்று முழுச்சீர்களாகவோ, இஃது என்ற சொல்லுடன் வேறு சொல்லைச் சேர்த்து மூன்றாஞ்சீராகவோ அமைக்கலாம்.

எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென்று நாணமின்றி
உங்களுக்கு யானும் உரைக்கவோ? - "எங்கடமிழ்!
எங்கடமிழ்!" என்றுசொல்லி எந்தாயைச் சாகவிட்டோம்
எங்கடமிச் சொல்லினிலை இஃது! - இரா.தி.

என்பது போல நேரிசை வெண்பாவை அமைக்கலாம். இவ்வகையில் இயற்றப்படுவது ஒருவிகற்ப நேரிசை வெண்பாவாக இருக்கும்.

இனிப் பரிசு திட்டத்துக்கு வந்த பாடல்களிற் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. சிலர் 'எங்கள்' என்று தொடங்கி 'இஃது' என்று முடித்திருந்தனர் ஆனால் கொடுக்கப்பட்டதொடரை மறந்தனர். சிலர் 'எந்தமிழ்' என்று மாற்றிக்கொண்டனர்.

2. சிலர் 'எங்கள்' என்று தொடங்கி, 'என்றே', 'நிலை' 'இனிப்பு', 'ஈது' என்பன போன்ற சொற்களால் முடித்திருந்தனர்.

3. சிலர் 'தமிழ்ச்சொல்லின் + நிலை' என்பதைத் 'தமிழ்ச்சொன்னிலை' என்று தவறாகப் புணர்த்தெழுதியிருந்தனர்.

4. சிலர் 'எங்கள்+தமிழ் = எங்கட்டமிழ்' என்று புணர்த்தெழுதியிருந்தனர்.

5. சிலர் 'எங்கள்(ட்)டமிழ்' என்று டகரவொற்றை அடைப்புக்குள் இட்டிருந்தனர். வல்லொற்றுகள் எங்கும் அவ்வாறு அடைப்புக்குள்வாரா.

6. 'தமிழ்ச்சொல்லி னிலையிஃது' என்பது தளைவழு

7. 'நிலையிஃது என்றுரைத்த' என்பது 'நிலையிஃ தென்றுரைத்த' என்று புணர்ந்து சீரும் தளையும் சிதையும்.

8. நேரிசை வெண்பா என்ற குறிப்பை நோக்காது ஒருவர் நேரிசை யாசிரியப்பா இயற்றி, அதன் தொடக்க இறுதிகளில் கொடுத்த தொடரை அமைத்திருந்தார்.

9. 'ஏற்றமுரும்' - சொற்பிழை; 'ஏற்றமுறும்' என்று வரல்வேண்டும்

10. ஆயிற்றெங்- கள்தமிழ் என்று சீர்பிரித்துக் கள்தமிழ் என்பதை ளகர எதுகையாகக் கொண்டிருந்தார். தகரத்தின்முன் ளகரம் புணர்ந்து டகரமாகி நிற்கும் அல்லது கெடும்.

11. எ-லி ; தி-மொ- இவை மோனையாகா.

12. எங்கள் என்பதற்கு ஆங்கிலம் எதுகையாகாது - முதலெழுத்துகள் எ-ஆ எனக் குறிலும் நெடிலுமாய் இருத்தலின்.

13. சங்கதம் (தொடர்பு), மந்திரிகள் (அமைச்சர்கள்), இருடி (துறவி), மோகம் (காதல்) - ஆகியன தமிழல்ல.

பாவலர் பரிசு திட்டம் - 44

'ஞாயிறுதிங்கயளத்திசை யயழினு நமக்
கென வென்றுவாழ்ந்திடுவார்'

என்பது ஒருவகை மண்டிலப்பாவின் ஓரடி. இதனை முதல் நடு இறுதி என எங்கேனும் அமைத்து ஒரு பாடல் இயற்றி வரும் கடகம் உ0 (5.8.2008)க்குள் விடுக்க.