ஆறுமுகச்சாமி ஓதுவார் மீது தீட்சிதர்கள் மீண்டும் தாக்கு

சிதம்பரம் நடராசர் கோயில் நேற்று முன்நாள் இரவு சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடச் சென்ற ஓதுவார் ஆறுமுகசாமியுடன் 5க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் சிற்றம் பல மேடையில் சென்று பாட வேண்டும் என்றால் முறையே ஒவ்வொருவரும் ரூ. 100 தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு ஆறுமுகச்சாமி, "சிற்றம்பல மேடையில் ஏறிக் கடவுளைப் பற்றித் தேவாரம், திருவாசகம் பாடுவதற்குப் பணம் பெறக்கூடாது என்று அரசின் ஆணை உள்ளது. முதலமைச்சர் கலைஞரும் தெரிவித் துள்ளார். அப்படியிருக்கும்போது பாடுவதற்காக ஏன் பணம் கேட்கிறீர்கள்? இவ்வாறு பணம் கேட்பதால்தான் ஒருவரும் பாட வருவதில்லை" என்று தீட்சிதர்களிடம் தெரிவித்தார். அதற்குத் தீட்சிதர்கள், "உங்களுக்கு மட்டும்தான் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு இசைவளிக்க முடியும். ஆனால் மற்றவர்கள் பாடுவதற்கு இசைவளிக்க முடியாது. அப்படிப் பாட வேண்டும் என்றால் பணம் செலுத்தி விட்டுப்பாடிக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீட்சிதர்களுக்கும், ஓதுவார் ஆறுமுகச்சாமிக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது தீட்சிதர்கள் ஒன்றுகூடி அரசின் ஆணையைக் கிண்டல் செய்துள்ளனர். மேலும் சினமடைந்த தீட்சிதர்கள் 2 பேர் ஆறுமுகச்சாமியின் தோள்பட்டையில் தாக்கியுள்ளனர். மேலும் 2 பேர் எட்டி உதைத் துள்ளனர். - (நன்றி : தமிழ் ஓசை 8 சூலை 2008)