பாவலர் பரிசுதிட்டம்

பாவலர் பரிசுதிட்டம்-36இல் பரிசு பெற்றவர்

பெயர்:மா. சு. மணி
பிறந்த நாள்: 14-7-1928.
பிறந்த ஊர்:திருக்கழுக்குன்றம்
தந்தையார்:மாணிக்கனார்
தாயார்:கண்ணம்மையார் (மறைவு)
துணைவியார்:புலவர் சரசுவதி (மறைவு)
மக்கள்: ஆண்மக்கள்: நக்கீரன், அருள், மலர்வண்ணன் (பொறிஞர்கள்)
மகள்:கயல்விழி (பொறிஞர் பட்டயம்)
கல்வித்தகுதி:புலவர் பட்டம்
பணி: விருது பெற்ற தமிழாசிரியர் (ஓய்வு)
படைத்த நூல்:'கவிதைப் பூக்கள்'
பெற்ற விருதுகள்:'முத்தமிழ்ச்செம்மல்', 'பாக்கொண்டல்’,
'பாவேந்தர் பரம்பரைப் பாவலர்'
குறிக்கோள்:தூய தமிழுணர்வை வளர்த்தல்
முகவரி: 31, பிள்ளையார்கோயில் தெரு,
தேசுமுகிப் பேட்டை, திருக்கழுக்குன்றம்-603109
காஞ்சிபுரம் மாவட்டம். பேசி: 2744885
பொறுத்தாற்ற வேண்டுகிறேன்

சென்ற இதழில் பாவலர் பரிசுதிட்டம் 36இல் பரிசுபெறும் பாடலாக அறிவிக் கப்பெற்ற ‘எழுபதாயிரம்’ என்ற பாடலில் நான்காமடியின் இரண்டாம் சீர் கூவிளத்துக்குப் பதில் கருவிளமாக இருந்த பிழை. இதழ் அச்சான பிறகே உணரப்பட்டது. அதை எனக்குணர்த்திய நண்பர்கட்கு நன்றி. அப்பாடலை இயற்றிய பாவலர் சி. பெருந்தேவனும் தவற்றை உணர்ந்து வருந்தி,

'எனது பாடல் பரிசு பெற்றது கண்டு மகிழ்ந்தேன். 'உலகத்தமிழர் அனைவரும் ஓரணியாக நின்று இலங்கை அரசை எதிர்க்க வேண்டும்' என்ற கருத்துத் தேர்வாளர்களைக் கவர்ந்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த பக்கத்தில் கருத்தூன்றுக பகுதியில், 'அடிதோறும் இரண்டாம் சீராகக் கூவிளம் மட்டுமே வரவேண்டும்' என்பதைக் கண்டதும், 'பளார்' என்று கன்னத்தில் அறைவதுபோல இருந்தது. என் உள்ளம் பட படத்தது. உடல் வியர்த்தது. இரண்டாம் இடத்தில் உள்ள பாவலரே பரிசுக் குரியவர்'.

என்று மடல் எழுதினார். எனவே, சென்ற இதழில் வெளியான பாடல்களில், இரண்டாம் இடத்தைப் பெற்ற சிங்க ளச்சிறு நரிகளின் என்ற பாடலைப் படைத்த புலவர் மா. சு. மணி அவர்களுக்கு உரூபா 500 பரிசு வழங்கப் படுகிறது. நேர்ந்த தவறுகளுக்கு அன்புகூர்ந்து என்னைப் பொறுத்தாற்றுமாறு பாவலர்பெருமக்களை வேண்டுகிறேன்.

பாவலர் பரிசு திட்டம்-37
நான்கடிக் கலித்தாழிசை

உரூபா 500 பரிசு பெறும் பாடல்:

1.சரியான வாழ்வு தமிழனுக்கு வேண்டின்
நரியான நெஞ்சர் நமையாளல் நீக்கு
நரியான நெஞ்சே நமக்கழகா மென்றால்
கரியான நம்மினமும் காணாமற் போகும்!
காவாத செந்தமிழும் காணாமற் போகும்!
-மணிமேகலை குப்புசாமி, புதுச்சேரி

வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி)

2.இனமானம் இல்லா இழிதகைய ராகி
மனம்போன போக்கில் மகிழ்வெய்தல் வாழ்வா?
மனம்போன போக்கில் மகிழ்ந்திவண்வாழ் வாயேல்
உனைமாந்தன் என்றுரைக்க ஒப்பார்கள் நல்லோர்
உன்னோடு வாழ்வதற்கும் ஒப்பார்கள் நல்லோர்
பைந்தமிழ்ப்பாவலர் புலவர் சி. பெருந்தேவன், தவளக்குப்பம்

3.அலைபோலத் துள்ளும் அறிவாற்றல் கொண்டே
மலைபோலத் துன்பம் வரினேற்று வெல்வாய்
நிலையான கொள்கை நெறிபோற்றி நின்றே
விலைபோத லில்லா வியன்வாழ்வைக் கொள்வாய்!
விளைகின்ற மேலாம் வியன்வாழ்வைக் கொள்வாய்!
கலைமாமணி கோவி. கலியபெருமாள், அரியாங்குப்பம்

4.தாங்கும் செவிலித்தாய் தன்னன்னை ஆவாளோ?
ஆங்கிலமா தாயாகும்? ஆய்ந்துணர மாட்டாமல்
ஏங்கும் தமிழினமே இன்றுவரை மாறாமல்
ஆங்கேநீ பார்ப்பதெல்லாம் அக்கரையின் பச்சைதான்!
ஆராய்ந்தால் ஆங்கிலமே அக்கரையின் பச்சைதான்!
ஆ. குமாரசாமி, சென்னை-95

5.பிறப்புரிமைக் காகப் பெரும்போர் புரியும்
மறத்தமிழர் தம்மையே மாண்பெதுவு மின்றி
வெறிகொண் டழிக்கின்றார் வெஞ்சினத் தாலே
தறிகெட்ட சிங்களர் தாழ்ந்தடங்கும் நாளெதுவோ?
தமிழர்தம் வீரத்தால் தாழ்ந்தடங்கும் நாளெதுவோ?
பாவலர் பொன். பசுபதி, புதுச்சேரி-13

6.முடிவாக வேண்டும் முயற்சியெலாம் என்றால்
மடியாக வாழும் மடத்தனங்கள் போக்கு
மடியாக வாழ்தல் வளமையென நின்றால்.
பொடியாக உன்னுறவும் பூண்டோடு போகும்!
பொன்னான உன்னறிவும் பூண்டோடு போகும்!
ஊருணிப் பாவலர், சென்னை-17

7.புலியாக வாழ்ந்து புகழ்படைத்தார் அந்நாள்
எலியாக ஆனார் இளந்தமிழர் இந்நாள்
வலுவாக மாறி வளம்பெறும் அந்நாள்
கொலையாளும் சிங்களவர் குற்றுயிராம் நன்னாள்
கோலோச்சும் தீயுளத்தார் குற்றுயிராம் நன்னாள்.
வே. ச. திருமாவளவன், புதுவை-8

8.தாய்மண்ணின் வீரம் தமிழ்க்குருதி காணதனை
ஆய்ந்துண்மை ஓராய் அவர்தமிழர் நாமுறவு
தோய்ந்தன்பால் ஈவோம் துணைவலிமை யாவுமுயிர்
மாய்ந்தாலும் ஈழம் மலர்ந்துலகில் வாழும்!
மடிந்தாலும் நாளை மலர்ந்துலகில் வாழும்!
கருவை மு. குழந்தை

9.பேராயக் கட்சிப் பெரியீரே வங்கம்போல்
சீரார் தமிழீழம் செய்தளித்துப் பேறுறுக!
ஈரச் செயலதனால் இவ்வுலகே ஏத்துமுமை
வீரத் தமிழினமும் வேட்போடே ஏந்தும்
வீற்றிங்கே ஆட்சிசெய வேட்போடே ஏந்தும்!
பொறிஞர் அகன், மாத்தூர்

10.வளமான நாடு வறுமையிலா மக்கள்
கலவாத நெஞ்சில் களிப்புடன் கல்வி
நிலமீதில் காணல் நெறியுடைய மாந்தர்
உலகாள வந்திடி லுண்டாகு மென்போம்.
ஒன்றாக வந்திடி லுண்டாகு மென்போம்.
சு. சொக்கலிங்கம். செல்லப்பெருமாள்பேட்டை

11.வல்லர சாகி வளம்பெறும்நம் நாடென்றே
சொல்வதால் மட்டுமது தோன்றிடுமோ சொல்லிடுவாய்
கல்வியுடன் பல்தொழிலும் காடெல்லாம் வேளாண்மை
எல்லா வகையிலும் ஏற்றமுற வேண்டுமன்றோ?
இணைந்தேநாம் நன்குழைத்தே ஏற்றமுற வேண்டுமன்றோ?
ப. நீலா, சத்தியாநகர் (மேற்கு)

12.பொய்யா மொழியார் புகல்வதுபோல் இங்குமழை
பெய்துபெய் யாதழிக்கும் பெற்றித்து! மற்றயல்
பெய்வதிலே நாமுரிமை பெற்றிருந்தும் வம்பாக
மைந்நெஞ்சர் நீரை மறுக்கின்றார் என்னே!
மாந்தம் தனையே மறுக்கின்றார் என்னே!
மு. திருவாணன், திண்டுக்கல்

13.விலகென்று சொன்னாலும் விட்டிடுமோ வீம்பு?
கலகந்தான் செய்கின்றான் கண்ணிமைக்கும் முன்பே
உலகமின்னும் உண்மையினை உள்வாங்கிக் கொள்ளப்
புலம்பாமல் பூணுகின்ற புத்துணர்வே தேவை
பொதுவிலெங்கும் பூசலில்லாப் புத்துணர்வே தேவை.
புலவர் த. ஆறுமுகன், சென்னை-49

14.மொழியாள வேண்டி முயலாமல் வீணே
பழியாள ராகப் பசுந்தமிழ் கொன்றே
இழிவாள ரானோம். இனியேனும் நாங்கள்
அழிவாள ராகவே ஆகிவிட மாட்டோம்!
அடையாள மில்லாராய் ஆகிவிட மாட்டோம்!
கலைமாமணி புலவர் பூங்கொடி பராங்குசம், இராசாநகர்

15.ஒருவழியும் காணாமல் ஊமையராய் வாழும்
தெருவோர ஏழையரின் சிக்கலினை ஆய்ந்தே
உருப்படியாய் வாழ உதவுகின்ற பாட்டுக்
கருத்துநிறை பாவலர்கங் காதரனின் பாட்டே!
கவின்றமிழைப் போற்றிடுகங் காதரனின் பாட்டே!
பாவலர் மா. வரதராசன், சென்னை

16.மழையளவாய்ப் பெய்தால் வயல்செழுமை யாகும்
தழைவளத்தை இட்டால் தனிச்சுவையுங் கூடும்
பிழைத்திடத்தன் பண்பு பெருமைவிடல் தீதென்
றுழைப்புளத்தைக் கொண்டால் உறுபசிதான் ஏதோ?
உயிர்குடிக்கும் அந்த உறுபசிதான் ஏதோ?
புலவர் வீ. வில்வநாதன் க. மு., வெங்காலூர்-16.

கருத்தூன்றுக

சென்ற பரிசுதிட்டத்தில் கொடுத்திருந்த
உருவாக வேண்டும் உனக்கொருநா டென்றால்
பிரிவாக வாழும் பிழைப்போக்கை நீக்கு!
பிரிவாக வாழ்தல் பெருமையெனக் கொண்டால்
விரைவாக உன்னினமும் வேரோடு மாயும்!
மேலான உன்மொழியும் வேரோடு மாயும்! - இரா. தி.

என்ற பாடல் கலித்தாழிசை என்னும் பாவினத்தைச் சேர்ந்தது.

அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினில்
கடையடி மிகுவது கலித்தா ழிசையே(யாப்பருங்கலம்-87)

என்பது இதன் இலக்கணம். இதன் விரிவான இலக்கணத்தைப் பாவலர் பண்ணை 69ஆம் பக்கத்தில் காணலாம்.

1. இறுதியடியின் இறுதியிரு சீர்களும். அதன் பாதியின் இறுதியிரு சீர்களும் மடக்காக (மீண்டும் அதே வடிவில் வருவனவாக) இருக்கவேண்டும். காட்டு: 'செவியென்ன செவியே, 'நாவென்ன நாவே', 'கண்ணென்ன கண்ணே' (ஆய்ச்சியர் குரவை), 'என்றுபந்த டித்துமே' (வாழ்த்துக்காதை) என்று வருவதைச் சிலப்பதிகாரக் கலித்தாழிசைகளிற் காணலாம். இப்படியின்றி, 'தலைகொய்வீர் இன்றே - முன்னிற்றல் நன்றே' என்றும், 'நாடோறும் வீழ்வர் - நாடோறும் வீழும்' என்றும் வேறுபட வருவன மடக்காகா.

2. கொடுத்திருந்த பாடல் வெண்டளையால் ஆனது. அடியின் இறுதிச் சீர்க்கும் அடுத்த அடியின் முதற்சீர்க்கும் வெண்டளை வேண்டும். சிலர் பாடல்களில் அவ்வாறில்லை. இறுதியடியில் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும், பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. ஆனால் பலர் தளை பற்றியே கவலைப்படவில்லை.

3. சில பாடல்களில் 1. 3ஆம் சீர்களில் மோனையில்லை.

4. நான்காமடியின் முதற்சீர்க்கும் அதன் பாதியின் முதற்சீர்க்கும் மோனை வேண்டும். பல பாடல்களில் அவ்வாறில்லை.

5. சிலர் வெண்டளையில் தவறிய இடங்கள்: 'கண்டவர்க் குதவா, 'செல்லுகின்ற தடுமாற்றம், 'வெட்டி மற்றொட்டி', 'நாமும் தோய்ந்தன்பால்', 'யாவும் மாய்ந்தாலும்', 'வாழும் செந்தமிழ்', 'வாழ்க்கை வீழத்தான்'.

6. தமிழ், உமி என்பனவற்றிற்குப் பழி என்பது எதுகையாகாது.

7. புணர்ந்தால் சீர்சிதையும் இடங்கள் 'அலமந்து என்றைக்கும்', 'ஏது உயிர்'.

8. தொல்+இனம்=தொல்லினம். தொன்னினம் ஆகாது.

9. துமி=நீர்த்துளி. ஆகையால், 'துமியாக வேகும்' என்பது பொருத்தமில்லை.

10. 'அதியமானிற்கு' என்பது மரபில்லை.

11. 'வெண்கலச்சி லைகள்' என்பதுபோன்ற வகையுளிகள் விரும்பத்தகாதன.

12. விலக்கியிருக்கக்கூடிய அயற்சொற்கள்: வாக்கு (சொல்), சதிர் (நாட்டியம்), கணம் (நொடி), மூலம் (வேர்), இச்சை (விருப்பம்), பாதை (தடம்).

பாவலர் பரிசுதிட்டம் - 38

இந்த இதழின் முகப்பில் 'சந்த யாப்பினை' என்றும், 'இன்று செந்தமிழ்' என்றும் தொடங்கும் இரண்டு பாடல்கள் உள்ளன. அவ்வகையில் இன்றைய பொருளமைய ஒரு பாடல் படைத்து, வரும் சுறவம் உ0 (3-2-2008)க்குள் விடுக்க.