பாவலர் பரிசுதிட்டம்

பாவலர் பரிசுதிட்டம் - 39இல் பரிசு பெற்றவர்

பெயர்:புலவர். சி. பெருந்தேவன்
பிறந்த நாள்: 17.09.1942
தந்தையார்:பெ. சின்னசாமி - அலர்மேலம்மாள்
துணைவியார்:கமலாவதி
கல்வித்தகுதி: புலவர், முதுகலை
மக்கள்: சித்தானந்தம், க.மு. ப.இ., ஆசிரியர், இளங்கீரன்,
க.மு., ப.இ., ஆசிரியர், இளந்தேவன், க.மு.; நூலக
அறிவியல் இளவல்-வணிகர். இசைமொழி - இளங்கோ
பெயரர்:எழுவர் (அனைவர்க்கும் நல்ல தமிழ்ப்பெயர்கள்)
ஆற்றியபணி: முதனிலைத் தமிழாசிரியர் (ஓய்வு) 37 ஆண்டுகள்
பட்டம்:பைந்தமிழ்ப் பாவலர்
விருது:புதுவை மாநில நல்லாசிரியர்
வழிகாட்டி ஆசான்:முனைவர் இரா. திருமுருகனார்
படைத்துள்ள நூல்கள்:அறிவுலகக் காவலர்கள், ஆசிரியர் அறம்
அறத்தின் ஆட்சி (உரையுடன்)
முகவரி: 64, சின்னசாமி தெரு, தவளக்குப்பம்,
புதுச்சேரி-7. பேசி : 2618076.
பாவலர் பரிசுதிட்டம் - 40

உரூபா 500 பரிசு பெறும் பாடல் :

1.அண்டையில் ஈழத்தார் ஆற்றா தினைந்தேங்கல்
கண்டிங்கே காய்ந்திலர் காண்!
- வே.ச. திருமாவளவன், புதுவை-8.

வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி) :

2.நீலக் கடலிடை நீளலைகள் நீராடக்
காலைக் கதிர்நகைத்தல் காண்!
- கலைமாமணி கோவி. கலியபெருமாள், அரியாங்குப்பம்.

3.இல்லாரைக் கண்டால் இளகாத நெஞ்சே நீ
செல்லாத காசே தெளி!
- மு.இராம.கனகராசன்.

4.நின்னதா, நாட்டகத்தின் நீர், நிலன்? இந்தியக்
கன்னடா நன்காய்ந்தே காண்!
- மு. திருவாணன், திண்டுக்கல்.

5.தன்னிலையில் தாழாத் தகைசான்ற தாளாளர்
நன்னிலையின் நைந்திடார் காண்
- அர. செல்வமணி, சத்தியமங்கலம்.

6.நெஞ்சி லினிக்கின்ற நேரிழையே நீயின்றேல்
எஞ்சி இராதே எழில்!
- பாவலர் மா. வரதராசன், சென்னை-83.

7.சிங்களத்தி லெங்க ளினத்தாரின் சீர்கேட்டை
எண்ணியே நா(ன்) ஏங்கினே னே!
- பாவலர் பொன். பசுபதி, புதுச்சேரி-13.

முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் :

1.நாற்காலிச் சண்டைக்கே நாள்காணா தேல்ஏழைக்
காற்றலிங்கென் ஆட்சியாளர் கள்?
- பைந்தமிழ்ப்பாவலர் புலவர் சி. பெருந்தேவன், தவளக்குப்பம்.

கருத்தூன்றுக

சென்ற இதழிற் கொடுத்திருந்த

அன்னைநிலந் தன்னை யடைந்தீழ நாட்டார்க
ணன்னிலையைக் காணலெந்த நாள்? - இரா. தி.

என்பது இதழகல் குறட்பா. இதழகல்பா என்பது பலுக்கும்போது இதழ்கள் குவியாமலும், ஒட்டாமலும், அகன்றே இருக்கக் கூடிய எழுத்துகளால் இயன்ற பாடல். எனவே, அதில் உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ ஆகிய எழுத்துகள் வருதல் கூடாது. (இதன் இலக்கணத்தைப் 'பாவலர் பண்ணை' இரண்டாம் பதிப்பின் 66 ஆம் பக்கத்திற் காணலாம்.)

மேற்கண்ட பாடலில் உள்ள இவ்வியல்பை நோக்காமல் எழுதப்பட்ட குறட்பாக்கள் விலக்குண்டன.

1. 'நீங்கிட என்னாடே', 'தள்ளிடுக அன்னை' இழிந்தன அன்றே என்ற தொடர்கள் பிரிந்த நிலையில் இதழகல் இலக்கணத்திற்கு ஏற்பத் தோன்றினும், நீங்கிட வென்னாடே, தள்ளிடுக வன்னை, இழிந்தனவன்றே எனப் புணரின் வகரம் பெறுமாதலின் அத்தொடர்களைக் கொண்ட பாக்களும் விலக்குண்டன.

2. 'மீறியேனும்', 'போற்றுமாறு', 'எண்ணியேநான்' என்பன போன்ற விளாங்காய்ச் சீர்களைப் பெய்தல் விரும்பத்தக்கதன்று.

3. 'நாயைவிட தாழ்ந்தவரே', 'போரியற்ற சேர்', 'காத்திட செத்தால்' என்ற தொடர்களின் இடையே வல்லொற்று மிகும்.

4. இருத்தல் கேடு என்பது எழுவாய்த் தொடராதலின் லகரம் திரியாது.

5. வெ என்ற எழுத்துக்கு வ என்பது மோனையாகாது.

6. 'எல்லாரின் தாய்' என்பது 'எல்லாரின் தாயும்' என்று உம்மை பெற்று வரல் வேண்டும்.

7. கன்று, இன்னர் என்ற சொற்கள் முறையே போர் மறவர், இனிமை என்ற பொருள்களிற் பெய்யப்பட்டிருந்தன. அத்தகைய வழக்காறு இல்லை.

8. 'எந்தன்' - பிழை. என்றன், எந்தம் என்பனவே சரி.

பாவலர் பரிசு திட்டம் - 41

'செழுமைகொழித்தகாவிரியைச்சிறையிலிட்டாருலகமெலாந்தொழும்
பேராசான்றனைப்பழித்தார்தூயகுடிநீர்தரமறுத்தார்கழுதையுழவுக்
கிசைந்தாலுங்கருநாடகத்தார்முறையானவழியினடக்கவாரார்
காண்வம்பேயவர்க்குக்கரும்பாகும்'.- இரா. தி.

ஏட்டுச்சுவடிகளிற் காணப்படுவதுபோல மேலே கண்ட பாடலின் எல்லாச் சீர்களும் புணர்த்தும் இடைவெளியின்றியும் எழுதப்பெற்றுள்ளன. இப்பாடலை இன்ன வகையயன்று கண்டு, அவ்வகையில் காலத்துக் கேற்ற பொருளமைய ஒரு பாடல் இயற்றி வரும் மேழம் உ (05.05.2008) க்குள் விடுக்க.